அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கடமங்குளம் கண்மாய் பராமரிப்பு இல்லாமல், கழிவுநீர் விடப்பட்டு விவசாயமும், நிலத்தடி நீரும் பாழாகி விட்டதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திருக்குமரன் நகர், இந்திரா நகர், ராஜிவ் நகர், சீதா லட்சுமி நகர் உட்பட, புற நகர் பகுதிகளின் பின்புறம் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள கடமங்குளம் முன்பு, குடிநீர், விவசாயத்திற்கும் பயன்பட்டு வந்தது. கண்மாயை சுற்றியுள்ள 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. மிளகாய், பருத்தி, மாட்டிற்கு தேவையான புல் ஆகியவை விளைவிக்கப்பட்டன. ஆண்டு முழுவதும் கண்மாயில் தண்ணீர் நிறைந்து இருப்பதால் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட புற நகர் பகுதிகளில் உள்ள வீடுகளின் 'போர்வெல்'களில் நிலத்தடி நீர் நன்கு இருந்தது. ஊராட்சி மூலம் கண்மாயின் பல பகுதிகளில் போர்வெல் அமைத்து, பாலையம்பட்டியின் பல பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.காலப்போக்கில் கண்மாய் பராமரிப்பு செய்யாமல் விட்டதால், கரைப்பகுதிகள் சேதம் அடைந்தும், சுற்றிலும் முட்புதர்கள், சீமை கருவேலம் மரங்கள் வளர்ந்தும் உள்ளன. கண்மாயை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக கண்மாயில் விடப்பட்டு கண்மாய் நீர் கெட்டு விட்டது. கண்மாய் நீரை பாதுகாப்பதற்காக ஊராட்சி மூலம் லட்சக்கணக்கில் செலவழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைத்தும் பயனில்லை. தொடர்ந்து கண்மாயில் கழிவுநீர் சேர்கிறது. இதனால் பல ஆண்டுகளாக விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் செய்வதும் குறைந்து போனது. கண்மாய்க்கு வரும் மழைநீர் வரத்து ஓடைகளும் அடைபட்டு போய்விட்டன. கண்மாயை தூர்வாரி பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் அக்கறை காட்டுவது இல்லை. சேத மடை ந்த மழைநீர் வரத்து ஓடைகள்
சகரியா, விவசாயி: பல ஆண்டுகளாக கடமங்குளம் கண்மாயை நம்பி விவசாயம் செய்து வருகிறேன். கரிசல் காட்டுப்பகுதியில் இருந்து வரும் மழை நீர் வரத்து ஓடை அடைபட்டு போய்விட்டது. அந்தப் பகுதியில் உள்ள பாலத்தை உயர்த்தி கட்டாமல் விட்டதால், கண்மாய்க்கு தண்ணீர் வராமல் வேறு பகுதிக்கு சென்று விடுகிறது. கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் விவசாயம் பாதிப்பு அடைகிறது. குடிநீர் ஆதாரம்
சுப்பையா, விவசாயி: புறநகர் பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக கடமங்குளம் கண்மாய் இருந்தது. நாளடைவில் பராமரிப்பு இன்றி கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீரின் சுவை மாறிவிட்டது. கண்மாயை சுற்றியுள்ள வீடுகளின் போர்வெல்களில் தண்ணீர் கெட்டு விட்டது. கண்மாயை பராமரித்து, மேடு பள்ளங்களை சரி செய்து, கண்மாய் கரையை உயர்த்த வேண்டும். கழிவுநீர் சேராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.