பெண் டி.எஸ்.பி., கூந்தலை இழுத்து தப்பியவர் கை முறிவு
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மூன்று நாட்களுக்கு முன், லோடு வேன் டிரைவர் காளிக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை, அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., காயத்ரி தடுக்க முயன்ற போது, போராட்டக்காரர்கள் சிலர் டி.எஸ்.பி.,யின் கூந்தலை இழுத்து தாக்கினர். இந்த வழக்கில், 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய நபரான ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன், 28, தலைமறைவாக இருந்தார்.அருப்புக்கோட்டை அருகே தொப்புலாக்கரை காட்டு பகுதியில் முருகேசன் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, திருச்சுழி டி.எஸ்.பி., ஜெகநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் முருகேசன் தப்பி ஓட முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்ததில் வலது கை முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.