கால்நடை கணக்கெடுப்பு மார்ச் 31 வரை அவகாசம்
விருதுநகர்: தேசிய கால்நடைகள் 21வது கணக்கெடுப்பு பிப்ரவரியில் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் வட மாநிலங்களில் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால் இம்மாதம் இறுதிக்குள் முடிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. 2019ல் 20வது கால்நடை கணக்கெடுப்பு பணி நடந்தது. அதன் பின் 21வது கால்நடைகள் கணக்கெடுப்பு கடந்தாண்டு அக்டோபர் இறுதியில் துவங்கி பிப்ரவரியில் முடிக்க திட்டமிடப்பட்டது.தமிழகத்தில் 38 மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள், 1500 மேற்பார்வையாளர்கள், 6700 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இக்கணக்கெடுப்பு பணி அலைபேசி ஆப்' மூலம் எடுக்கப்படுகிறது. இதற்காக கால்நடை டாக்டர்கள், கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கணக்கெடுப்பு துவங்கும் போது தாமதம் ஏற்பட்டாலும் தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.ஆனால் வட மாநிலங்களில் டாக்டர்கள், கணக்கெடுப்பாளர்களின் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் ஏற்கனவே திட்டமிட்டப்படி பிப்ரவரியில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வட மாநிலங்கள் கூடுதல் அவகாசம் கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனால் மார்ச் 31க்குள் கணக்கெடுப்பு பணிகளை முடிக்க கூடுதல் அவகாசத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.