| ADDED : ஜூன் 18, 2024 06:39 AM
மாவட்டத்தில் கிளை நுாலகங்கள் 88, மாவட்ட மைய நுாலகம் 1, முழுநேர நுாலகங்கள்(தாலுகா) 13, ஊர்ப்புற நுாலகங்கள் 56 என 158 நுாலகங்கள் உள்ளன. இவற்றில் நுாலகத்துறை கீழ் இயங்கும் முழுநேர, கிளை நுாலகங்கள் ஊர்ப்புறங்களில் இருந்தாலும் பெரும்பாலும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட ஊர்ப்புற நுாலகங்கள் எப்போதும்பூட்டியே கிடக்கின்றன.இதற்கு நுாலகர்கள் உண்டா, இங்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றனவா என எந்த தகவலும் தெரியாத நிலை உள்ளது.கிராம மக்கள் தங்கள் அறிவை மேம்படுத்தவும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நகர்ப்பகுதி வரை அலைக்கழிக்கப்படாமல் இருப்பதற்கே கிராம அளவில் நுாலகங்கள்கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் அனைத்து ஊர்ப்புற நுாலகங்களும் முடங்கி கிடக்கின்றன. இதனால் மாணவர்கள் தாலுகா, மைய நுாலகங்களை பயன்படுத்துகின்றனர். கிராமப்புற நுாலகம் கொண்டுவரப்பட்ட நோக்கமே சிதைந்து விட்டது. மேலும் தற்போது அதிகளவில் போட்டித்தேர்வு, புத்தக வாசிப்பு அதிகரித்து வருவதால் ஊரக நுாலகங்கள் செயல்படுவது அவசியமாகிறது. கிளை நுாலகங்கள் பலவற்றில் கட்டடங்கள் சேதமடைந்தும், வாசகர்கள் இருக்கை வசதி குறைவாகவும் உள்ளன. இந்தியாவின்முதுகெலும்பு கிராமங்கள் என மத்திய அரசு நம்பி வரும் நிலையில் அவற்றின்நுாலகங்களே முடங்கி கிடப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. படிப்பறிவை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்லாதோருக்கான இயக்கம் நடத்துவதை காட்டிலும், ஊர்ப்புற நுாலகங்களை செயல்படுத்துவது மக்களை எப்போதும் கல்வியுடன் தொடர்பில் வைத்திருக்க உதவும். இந்த நுாலகங்களை செயல்படுத்த கோரி சமூக ஆர்வலர்கள் மனு அளித்தால் அன்று மட்டும் ஊராட்சி நிர்வாகத்தினர் திறந்து வைத்து செயல்படுத்துவதுபோல் பாவனை செய்கின்றனர். மீண்டும் சில நாட்களிலே முடங்கி விடுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் முடங்கி கிடக்கும் நுாலகங்களை கணக்கெடுத்து இவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.