உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தக்காளி அதிகமாக விளைந்தும் விலை போகாததால் மன உளைச்சல்

தக்காளி அதிகமாக விளைந்தும் விலை போகாததால் மன உளைச்சல்

திருச்சுழி : திருச்சுழி சுற்று கிராமங்களில் தக்காளி விளைச்சல் அதிகமாகி விலை போகாமல் இருப்பதால் விவசாயிகள் மன உளைச்சலில் உள்ளனர்.திருச்சுழி அருகே ஆலடிபட்டி, மீனாட்சிபுரம், கரிசல்குளம், ராமசாமி பட்டி, தமிழ்பாடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். தக்காளி விவசாயம் நன்கு நடந்த நிலையில், இந்த ஆண்டு அதிகமாக விளைந்துள்ளது. இதனால், தக்காளி விலையும் குறைந்து போனது. தற்போது, 25 கிலோ உள்ள தக்காளி பெட்டி ஒன்று 75 முதல் 100 வரை விலை போகிறது. விவசாயி தக்காளியை பறிக்க 10 கிலோ கொண்ட ஒரு பெட்டிக்கு 250 ரூபாய் கூலி கொடுக்க வேண்டியுள்ளது. இதுதவிர, மார்க்கெட்டிற்கு தக்காளியை கொண்டு வர, 25 கிலோ உள்ள ஒரு பெட்டிக்கு கூலி 45 ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளது. இது கட்டுப்படியாகாததால் விவசாயிகள் தக்காளியை செடியில் இருந்து பறிப்பதை நிறுத்திவிட்டனர். செடியிலேயே தக்காளி பறிக்கப்படாமல் கருகி, காய்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் முடிந்த வரையில் தாங்களே பறித்து சில்லறை விற்பனைக்கு கொண்டு சென்று விற்று வருகின்றனர். அதிக தக்காளி விளைச்சலால் மகிழ்ச்சி அடைய வேண்டிய விவசாயிகள், விலை மிகவும் குறைந்து போனதால் மன உளைச்சலில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை