சிவகாசி ரோட்டில் பட்டு போன மரங்களால் விபத்து அபாயம் வாகன ஓட்டிகள் அச்சம்
விருதுநகர்: விருதுநகர் -- சிவகாசி ரோட்டில் உள்ள பட்டுபோன மரங்கள் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் அதிகமான மரங்கள் நிறைந்துள்ளது. இவற்றில் பல மரங்கள் வயது முதிர்வு, மழை, வெயிலுக்கு வலுவிழந்து தொடர்ந்து வளராமல் பட்டுபோன நிலையில் உள்ளது. இவை எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது.இந்த ரோடு வழியாக ஆமத்துார், செங்குன்றாபுரம், மீசலுார், சின்னப்ரெட்டியப்பட்டி, அதனை சுற்றிய ஊரகப்பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தினமும் பணிக்கு செல்பவர்கள் விருதுநகருக்கு வந்து செல்கின்றனர். கோவில்பட்டியில் இருந்து விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்கு வரும் அரசு, தனியார் பஸ்கள் மதுரைக்கு இவ்வழியாகவே செல்கின்றன.இப்படி வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருப்பதால் பட்டுபோன மரங்கள் பஸ்கள் மீது விழுந்தால் பயணிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. இங்கு ரோட்டின் இரு புறங்களிலும் அதிகமாக உள்ள பட்டுபோன மரங்களை அகற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.எனவே சிவகாசி ரோட்டில் உள்ள பட்டுபோன மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.