சாத்துாரில் பாஸ்ட்புட் கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்
சாத்துார்: சாத்துாரில் தள்ளுவண்டி பாஸ் புட் கடைகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்து கெட்டுப்போன சிக்கனை பறிமுதல் செய்தனர். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மோகன் குமார், வீரமுத்து, ராஜேந்திரன் ஆகியோர் சாத்துார் மெயின் ரோடு, பைபாஸ் ரோடு, படந்தால் ரோடு பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகள் பாஸ்ட் புட் கடைகள், டிபன் கடைகளை ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது கெட்டுப்போன சிக்கன் 10 கிலோ, நுாடுல்ஸ் 5 கிலோ அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்பட்ட சிக்கன் கிரேவி 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ஆய்வின் போது போலீசாரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என ஆய்வு செய்தனர். 10 கடைகளுக்கு ரூ.27000 அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.