உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அறங்காவலர் பெயரிலான நிலங்கள் கோயில் பெயருக்கு மாற்றம்

அறங்காவலர் பெயரிலான நிலங்கள் கோயில் பெயருக்கு மாற்றம்

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அருகே பல கோடி ரூபாய் மதிப்பில் பரம்பரை அறங்காவலர் பெயரில் இருந்த 388 ஏக்கர் கோயில் நிலங்கள், மாவூத்து உதயகிரிநாதர் கோயில் பெயருக்கு மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஆலய நிலங்கள் பிரிவு தாசில்தார், சர்வேயர் குழுவினர் நேற்று கோயில் நிலங்களை நேரடி ஆய்வு செய்தனர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கோட்டையூர் வருவாய் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாவூத்து உதயகிரி நாதர் சுவாமி கோயில் உள்ளது. இது ஹிந்து அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பட்டியல் கோயிலாகும். இதற்கு இனாமாக வழங்கப்பட்ட 388 ஏக்கர் நிலங்கள் கோயிலை சுற்றி பல்வேறு பகுதிகளில் உள்ளது. இதன் மதிப்பு தற்போது பல கோடி ரூபாய் ஆகும் இந்த நிலங்கள் பல ஆண்டுகளுக்கு முன் பரம்பரை அறங்காவலராக இருந்த காசிகிரி கோஷாகியார் என்ற தனிநபர் பெயரையும் சேர்த்து வருவாய் ஆவணங்களில் பட்டா தாக்கலாகி, தற்போது பரம்பரை அறங்காவலராக உள்ள ரூபாபாய் பெயரில் உள்ளது. இந்நிலையில் கோயில் பெயரிலேயே கோயில் நிலங்களின் வருவாய் ஆவணங்கள் இருக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து தனிநபர் பெயரில் இருந்த கோயில் நிலங்களை, உதயகிரிநாதர் கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது.இதனையடுத்து பரம்பரை அறங்காவலர் ரூபா பாய், தனது பெயரில் இருந்த பட்டாவை கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து வழங்க, விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு செய்தார்.இதனையடுத்து அறநிலைத்துறை ஆய்வாளர், ஆலய நிலங்கள் தனி தாசில்தார், கோட்டையூர் வி.ஏ.ஓ. ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். இதனையடுத்து காசிகிரி கோஷாகியர் என்ற பெயரில் தாக்கலாகி இருந்ததை ரத்து செய்து, உதயகிரிநாத சுவாமி கோயில், மாவூத்து என்ற பெயரில் பட்டா திருத்தம் செய்ய விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.இதனையடுத்து நேற்று மாலை ஆலய நிலங்கள் தனி தாசில்தார் மாரிமுத்து, சர்வேயர் குழுவினர் நிலங்களை நேரடி ஆய்வு செய்தனர். இந்த கோயில் நிலங்களில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுத்திடவும், தனிநபர் பெயரில் பட்டா மாறுதல் செய்வதை தடுத்திடவும், வத்திராயிருப்பு தாலுகா வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !