பத்திரத்தில் ஒரு அளவு, நகராட்சி ஆவணங்களில் ஒரு அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவு ஆவணங்களில் ஒரு அளவும், பத்திரம் வைத்திருப்பவர்களிடம் உள்ள பத்திரத்தில் ஓரளவும் இருப்பதால் பட்டா பெற முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் மக்கள் தங்களது கிரைய ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட வீட்டுமனைகளுக்கு கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறவும், பாகவிஸ்தி பத்திரங்கள் அடிப்படையில் தனி பட்டா பெறவும் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது.இதில் பலருக்கு நகராட்சி சர்வே பிரிவில் உள்ள ஆவணங்களில் உள்ள அளவுகளும், பத்திரங்களில் உள்ள அளவுகளும் வித்தியாசப்படுகின்றன. இதனால், நகராட்சி சர்வே பிரிவின் உள்ள ஆவணங்களின்படி தான் பட்டா தர முடியும் என அலுவலர்கள் கூறுகின்றனர். ஒரு சிலருக்கு தங்கள் நில பத்திரத்தின் படி அளவு 300, 400 அடி அதிகமாக உள்ளது. நகராட்சி ஆவணங்களில் குறைவாக உள்ளது. ஆவணங்களில் உள்ள அளவின்படி தான் பட்டா தருவோம் என அலுவலர்கள் கூறுவதால் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதேபோன்று பலருக்கு அளவுகளில் வித்தியாசம் உள்ளது.20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் நகராட்சிக்கு பத்திரங்களில் உரிய அளவின்படி தான் வரிகள் கட்டி வருகிறோம். நகராட்சி ஆவணங்களில் குளறுபடி இருந்தால் நாங்கள் என்ன செய்வது என பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து, நகராட்சி சர்வே பிரிவு, வருவாய்த்துறை ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.