அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப்.14க்கு ஒத்திவைப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்:அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை பிப். 14க்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்தது.2006- -2011 தி.மு.க., ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய தமிழக அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2012ல் வழக்கு பதிவுப்செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் இருந்து 2022 டிசம்பரில் தங்கம் தென்னரசு, 2023 ஜூலையில் சாத்துார் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டனர்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து அமைச்சர்கள் விடுதலை செல்லாது எனவும், மீண்டும் இந்த வழக்குகளை ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முதலில் இருந்து விசாரிக்கவும் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அமைச்சர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2024 செப்.ல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் உச்ச நீதிமன்ற தடை நிலுவையில் இருப்பதால் விசாரணையை பிப்.14க்கு நீதிபதி ஜெயக்குமார் ஒத்திவைத்தார்.