உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கூடுதல் பார்க்கிங் வசதி தேவை, கப் அடிக்கும் கழிப்பறை

கூடுதல் பார்க்கிங் வசதி தேவை, கப் அடிக்கும் கழிப்பறை

விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் பார்க்கிங் வசதி, ஓட்டல்கள், கழிப்பறை உட்பட அடிப்படை வசதியின்றியும், பாதுகாப்பு குறைபாடுகளாலும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.1989ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1992ல் இந்த பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. அன்று முதல் பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல்' காரணங்களுக்காக சரியாக செயல்படாமல் அவ்வப்போது மூடப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இயங்கி வருகிறது.ஆனால் போதிய பராமரிப்பின்றி பயணிகளுக்கான அடிப்படை வசதிகளின்றி பஸ் 'ஸ்டாண்டுக்கு' பதில் 'ஸ்டாப்' ஆக மாறியுள்ளது.பார்க்கிங் பகுதியில் டூவீலர்கள் நிறுத்த இடமின்றி பலர் வெயிலிலும், மர நிழலிலும் நிறுத்திச் செல்கின்றனர். டூவீலர் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர்.பஸ் ஸ்டாண்டை சுற்றி சுற்றுச் சுவர்கள் இடிந்தும், சாய்ந்தும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் இரவில் அவ்வழியாக வந்து டூவீலர்களை திருடிச் செல்லும் நிலை உள்ளது.இங்குள்ள விளக்குகள் போதிய வெளிச்சமின்றி உள்ளன. பார்க்கிங் அருகே பஸ் ஸ்டாண்டிற்கு சொந்தமான இடங்கள் அதிகம் உள்ளன. அங்கு அருகிலுள்ள வீடுகளின் கழிவுநீர் விடப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் காட்சியளிக்கிறது. கழிப்பறையில் நுழைந்தாலே துர்நாற்றம் வீசுவதுடன் தண்ணீர் குழாய் உடைந்துள்ளதால் அசுத்தமாக உள்ளது.வளாகத்தில் கடைகளுக்காக 6 அறைகள் கட்டப்பட்ட நிலையில் இரவில் செயல்படும் பாராகவும், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறியுள்ளன. பஸ் ஸ்டாண்டின் இடது மூலையில் பழைய செப்டிக் டேங்க் இடிந்து ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது.மழைநீர் வடிகால்கள் இடிந்த நிலையில், மழைநீர் சேகரிக்கும் பைப்கள் உடைந்து மழை நேரங்களில் பயணிகள் அமரும் இடங்களில் தண்ணீர் தேங்குகிறது.ஒரு ஓட்டல் கூட இல்லாததால் பயணிகள் பஸ் ஸ்டாண்ட் வெளியே சென்று சாப்பிடுகின்றனர். ஓட்டல் அமைக்க ஒதுக்கப்பட்ட இடங்களில் 'வேறு' விஷயங்கள் நடைபெறுகின்றன. மக்கள் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் வசதிகள் குறைந்து காணப்படுகின்றன.

புனரமைப்பில்லை

- குமார், விருதுநகர்: பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இதுவரை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்ட் பூச்சு பெயர்ந்துள்ளது. பயணிகள் அவசரத்திற்கு கூட கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை.

வெளியூர் பஸ்கள் வரவேண்டும்

- ஜெயபாரத், நகரச் செயலாளர், மா.கம்யூ., விருதுநகர்: புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்ட நோக்கமே வெளியூர் பஸ்கள் வந்து செல்வதற்கு தான். ஆனால் அவை பைபாஸ்களிலேயே சென்று விடுகின்றன. மாவட்டத்திற்குள் உள்ள ஊர்களுக்குச் செல்லும் பஸ்களே அதிகளவில் வருகின்றன. கலெக்டர் அலுவலக ஸ்டாப்களில் நிற்கின்றன. அங்கிருந்து நகருக்குள் ஆட்டோக்களில் அதிக தொகை கொடுத்து வரவேண்டிய நிலையுள்ளது.ஆம்னி பஸ்கள் இரவு 8:00 முதல் 11:00 மணி வரை சர்வீஸ் ரோடுகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அவற்றை புது பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை