உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரூ.58 கோடி..: சிவகாசி சுற்றுச் சாலைக்கு 2வது கட்ட நிதி ஒதுக்கீடு: சாத்துார் --கழுகுமலை 6.7 கி.மீ., சாலை இணைப்புக்கு

ரூ.58 கோடி..: சிவகாசி சுற்றுச் சாலைக்கு 2வது கட்ட நிதி ஒதுக்கீடு: சாத்துார் --கழுகுமலை 6.7 கி.மீ., சாலை இணைப்புக்கு

சிவகாசி: சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தில் முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இரண்டாம் கட்டமாக சாத்துார் - சிவகாசி - கழுகுமலை சாலையை இணைக்கும் வகையில் 6.7 கிலோ மீட்டர் துாரத்துக்கு ரோடு அமைக்க ரூ.58.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி, எரிச்சநத்தம் - சிவகாசி, சிவகாசி - கன்னிசேரி, விருதுநகர் - சிவகாசி, சாத்துார் - சிவகாசி - கழுகுமலை, சிவகாசி - ஆலங்குளம், சிவகாசி - வெம்பக்கோட்டை ஆகிய ரோடுகளை இணைத்து 33.52 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை பணிக்கு திட்ட அறிக்கை தயாரிக்க 2012 ல் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021ல் சுற்றுச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் பணிகள் தொடங்கியது. சுற்றுச் சாலை பணிக்காக ஈஞ்சார், வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி, ஆனையூர், கொங்கலாபுரம், திருத்தங்கல், கீழத்திருத்தங்கல், வெற்றிலையூரணி, நாரணாபுரம், அனுப்பன்குளம் ஆகிய 10 வருவாய் கிராமங்களை சேர்ந்த 82 நில உரிமையாளர்களிடம் இருந்து 132.8 ஹெக்டேர் பட்டா நிலம், அரசு நிலம் 14.6 ஹெக்டேர் என 147.4 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.சுற்றுச்சாலை பணிகளை 3 பிரிவுகளாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி, சிவகாசி - எரிச்சநத்தம், சிவகாசி - விருதுநகர் ரோடுகளை இணைக்கும் வகையில் 10.5 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்க ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டாவது, மூன்றாம் கட்ட பணிகளுக்கான நில எடுப்பு பணிகள் 100 சதவீதம் முடிந்த நிலையில், கடந்த மாதம் மண் பரிசோதனை செய்யப்பட்டது.இரண்டாம் கட்டமாக விஸ்வநத்தம் - வெங்கடாச்சலபுரம் , சாத்துார் - சிவகாசி - கழுகுமலை , சிவகாசி - ஆலங்குளம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் 6.7 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்க ரூ.58.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு இரண்டாம் கட்ட சுற்றுச்சாலை பணிகள் தொடங்கும். இதன் மூலம் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர், சாத்துார் ரோட்டில் வரும் வாகனங்கள் நகருக்குள் வரமால் செல்ல முடியும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை