UPDATED : டிச 22, 2025 09:55 AM | ADDED : டிச 22, 2025 05:50 AM
நரிக்குடி:சிறுவர்கள் டூவீலர், கார் ஓட்டுவது அதிகரித்து வருவதால் விபத்துக்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இதை தவிர்க்க டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாத வயதில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க பெற்றோர் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது. மாவட்டத்தில், டூவீலர், கார் உள்ளிட் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தொழில், சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டிய அவசியம் இருக்கிறது. அதே நேரம் சிறுவர்களை சாகசப்படுத்த, திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக லைசென்ஸ் பெறாமலே கார், டூ வீலர் உள்ளிட்ட வாகனங்களை ஓட்ட பெற்றோர் அனுமதிக்கின்றனர். இளம் வயது, ஆர்வக்கோளாறு காரணமாக சிறுவர்கள் அதிவேகத்தில் ஓட்டுகின்றனர். அடம்பிடிக்கும் சிறுவர்களுக்கு அதிக திறன் கொண்ட வாகனங்களை வாங்கித் தருகின்றனர். சட்டப்படி வாகனங்கள் ஓட்ட 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். . ஆனால் சிலர் லைசென்ஸ் பெறாமலே டூவீலர்களை அதிக சத்தம் எழுப்பி ஓட்டுவதுடன், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க சாகசம் செய்கின்றனர். ரோட்டில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒட்டுவதால், சில நேரங்களில் விபத்து நேரிடுகிறது. டூவீலரில் 3 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு வளைந்து, நெளிந்து குறுக்கும், நெடுக்குமாக ஓட்டுகின்றனர். இவர்களை போலீசார் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். பயமின்றி ரோடுகளில் ஓட்டுவதுடன் நிலை தடுமாறி விழும் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இது ஒரு புறம் இருக்க, எதார்த்தமாக ரோட்டில் நடந்து செல்பவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி வருவது மிகவும் கொடுமையானது. இது போன்ற சம்பவங்களால் சிறுவர்களின் தந்தைக்கு அபராதம் விதிப்பதோடு சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. புதிய சட்டப்படி வாகன பதிவும் ரத்து செய்யப்படும் சூழ்நிலை உள்ளது. சிறுவர்கள் டூ வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்ட வயது தேவை என்பதை உணர வேண்டும். அதற்கு முன் வாகனங்கள் வாங்கிக் கொடுப்பது, ஓட்டுவதை தவிர்க்க பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.