செண்பகத் தோப்பில் தொடரும் யானை நடமாட்டம்; விவசாயிகள் அச்சம்
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் யானைகள் நடமாட்டம் தொடர்வதால் தோப்புகளுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து கூடுதல் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில வாரங்களாக ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு மலை அடிவார தோப்புகளில் யானைகள் நடமாட்டம் காணப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது யானைகள் புகுந்து தோப்புகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து ரேஞ்சர் செல்வமணி தலைமையில் நவீன வாகனத்தில் இரவு நேரங்களில் கூடுதல் வனத்துறையினர் மலையடி வார பகுதிகளில் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர்.ஆனாலும் யானைகள் நடமாட்டம் தொடர்ந்ததால் நிரந்தர தீர்வு கோரி விவசாயிகள் புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் பேச்சுவார்த்தை நடத்தி, யானை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இருந்தபோதிலும் கடந்த சில நாட்களாக ஒரு யானை தனியாகவும், பல நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட யானைகள் மலை அடிவார தோப்புகளுக்கு புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் தோப்புகளில் இரவு தங்கவோ, மாலை நேரங்களில் தோப்புகளுக்கு செல்லவும் முடியாமல் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.