உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விலையில்லா பொருட்களை பள்ளிக்கு அளிக்க தாமதம்; கலெக்டரிடம் மனு அளிக்க தீர்மானம்

விலையில்லா பொருட்களை பள்ளிக்கு அளிக்க தாமதம்; கலெக்டரிடம் மனு அளிக்க தீர்மானம்

விருதுநகர்: விலையில்லா பொருட்களை பள்ளிக்கு அளிக்க சிவகாசி வட்டாரக் கல்வி நிர்வாகம் தாமதம் செய்வதால், கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக ஊராட்சி நடுநிலைப்பள்ளியின் மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவகாசி அய்யனார்புரம் காலனி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது. இங்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்களான சீருடை, புத்தகப்பை, புத்தகங்கள், நோட்புக், வண்ண பென்சில்கள் என இதர பொருட்கள் அனைத்தும் பள்ளியிலே கொண்டு வந்து சேர்ப்பதற்கான நிதி வழங்கியும் சிவகாசி வட்டாரக்கல்வி நிர்வாகம் வழங்கவில்லை. இது குறித்து தலைமையாசிரியர் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை மனு அளித்தும் இதுவரை வழங்காத நிலை உள்ளது.இந்நிலை குறித்து பள்ளி மேலாண்மைக்குழுவில் விவாதம் செய்யப்பட்டது. இக்கல்வியாண்டில் மாணவர்கள் முதல் இணை சீருடை மட்டுமே வழங்கப்பட்டதால் புதிய சீருடை இல்லாமல் வருகை புரிவதை சுட்டிக்காட்டி வட்டாரக் கல்வி நிர்வாகம் விலையில்லாப் பொருட்களான இரண்டாம் இணை சீருடைகள், புத்தகப்பை போன்றவற்றை உடனே வழங்க டி.இ.ஓ., (தொடக்கல்வி), கலெக்டரிடம் மனு அளிப்பதென முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ