குழாய் திட்ட மதிப்பீடு வழங்கியும் பணி துவங்குவதில் காலதாமதம் பள்ளி திறப்புக்கு முன் நடவடிக்கை தேவை
விருதுநகர்: விருதுநகர் பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி செல்ல சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்வதற்கான திட்ட மதிப்பீட்டை குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி இரண்டு மாதங்களாகிறது. ஆனால் இதுவரை குழாய் அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை.விருதுநகர் பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி பஸ் வசதிக்கு சர்வீஸ் ரோடு அவசிய தேவையாக இருந்தது. இதனால் ரோடு வசதி ஏற்படுத்த கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகம் பரிந்துரையின் பேரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சர்வீஸ் ரோடு அமைக்க முன்வந்தது.இதற்காக ரோடு அமைய உள்ள இடத்தில் தோண்டி சமன்படுத்தும் போது குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய் சேதமாகியது. இதை நெடுஞ்சாலை ஆணையம் சரி செய்ய வேண்டும் என அதற்கான திட்டமதிப்பீட்டை குடிநீர் வடிகால் வாரியம் தயார் செய்து ஆணையத்திடம் கொடுத்தது.இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் ஒப்பந்தம் வழங்கி பணியை உடனடியாக துவங்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் இரண்டு மாதங்களை கடந்தும் ஒப்பந்த நிறுவனம் இதுவரை பணியை துவங்கவில்லை.மேலும் ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஒப்பந்த நிறுவனத்தின் காலதாமதத்தால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணிகளை உடனடியாக துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.