தினமலர் செய்தி எதிரொலி : கவுன்சிலிங் முடிந்தவர்களுக்குஆர்.எம்.ஓ., பணிக்கான ஆணை வழங்கல்
விருதுநகர்: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆர்.எம்.ஓ., (நிலைய மருத்துவ அலுவலர்) பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப நடந்த கவுன்சிலிங்கில் 8 பேர் ஆர்.எம்.ஓ., பணியிடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கு 35 நாட்களாகியும் பணி ஆணை வழங்கப்படாதது குறித்து தினமலர் நாளிதழில் செப். 3ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று 8 பேருக்கும் ஆர்.எம்.ஓ., பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆர்.எம்.ஓ., உதவி ஆர்.எம்.ஓ., பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கவுன்சிலிங் மூலமாக மட்டுமே நிரப்பப்படுகிறது. எம்.பி.பிஎஸ்., முடித்து அரசு மருத்துவராக 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு ஆர்.எம்.ஓ., பணியிடங்கள் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு முதலில் உதவி ஆர்.எம்.ஓ., ஆக பணிபுரிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதன் படி ஜூலை 29ல் நடந்த கவுன்சிலிங்கில் 15 பேர் பங்கேற்றனர். இதில் 8 பேர் சிவகங்கை, நாமக்கல், திருச்சி, கன்னியாகுமரி, ஓட்டேரி, சென்னை, வேலுார் ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆர்.எம்.ஓ., பணியிடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கு கவுன்சிலிங் முடிந்து ஒரு வாரத்தில் பணி ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 35 நாட்களை கடந்தும் பணி ஆணை வழங்கப்படவில்லை என தினமலர் நாளிதழில் செப்.3ல் செய்தி வெளியானது. மேலும் தினமலர் செய்தி எதிரொலியாக நேற்று 8 பேருக்கும் ஆர்.எம்.ஓ., பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.