அரசு மருத்துவக்கல்லுாரிகளில் ரேடியோ, கீமோ தெரபி சிகிச்சை; டாக்டர்கள் எதிர்பார்ப்பு
விருதுநகர்; புதிய அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான ரேடியோ, கீமோ தெரபி சிகிச்சை இல்லாததால் மற்ற அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு நோயாளிகளை பரிந்துரைக்க வேண்டிய நிலையுள்ளது. ரேடியோ, கீமோ தெரபி சிகிச்சை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு டாக்டர்கள் எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் 2022 ஜன., 12ல் திறக்கப்பட்டன. ஒவ்வொரு மருத்துவக்கல்லுாரிகளிலும் தற்போது கர்ப்பப்பை, மார்பக புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், வயிறு, எலும்பு புற்றுநோய்களை அந்தந்த துறை டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி நோயாளிகளை குணமடையை செய்து வருகின்றனர். ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் ரேடியோ தெரபி, கீமோ தெரபி சிகிச்சைகள் இதுவரை புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மற்ற அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு நோயாளிகளை பரிந்துரை செய்ய வேண்டிய நிலை தொடர்கிறது. ரேடியோ, கீமோ தெரபி சிகிச்சை அளிப்பதற்கான நவீன உபகரணங்களை தமிழக அரசு வழங்கினால் மட்டும் போதும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் உள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகங்கள் தொடர்ந்து மருத்துவக்கல்வி இயக்குனரகம், துறை அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே புதிய அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் புற்றுநோயாளிகளுக்கான ரேடியோ தெரபி, கீமோ தெரபி சிகிச்சை அளிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.