கிரஷர் துாசி, ஜல்லி கற்களை திறந்த நிலையில் ஏற்றி வரும் லாரி, டிராக்டர்கள் ; விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சிவகாசி : சிவகாசியில் கிரஷர் துாசி, ஜல்லி கற்களை திறந்த நிலையில் ஏற்றி வரும் லாரி, டிராக்டர்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. சிவகாசி அருகே எதிர்கோட்டை மாரனேரி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் குவாரிகள் இயங்குகின்றன. இங்கிருந்து லாரி, டிராக்டர்களில் கிரஷர் துாசி ஜல்லிக்கற்கள் ஏற்றி வரப்படுகின்றது. இவ்வாறு கொண்டு வரப்படும் கற்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை அதிகமாக வாகனங்களில் ஏற்றப்படுகின்றது. இதனை மூடி பாதுகாப்பாக கொண்டு வருவதில்லை. திறந்த நிலையில் அதிக அளவில் கற்கள் , கிரஷர் துாசி இருப்பதால் லாரிகள், டிராக்டர்கள் வேகமாக செல்லும்போது கற்கள் சிதறி கீழே விழுகின்றது. கிரஷர் துாசி பறந்து பின்னால் டூவீலரில் வருபவர்களை சிரமப் படுத்துகிறது. மேலும் வேகத்தடையில் ஏறி இறங்கும் போதும் கீழே விழுகின்றது. இதனால் அருகில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். கற்கள் வாகனங்களின் மீது கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கற்கள், துாசி ஏற்றி வரும் லாரி, டிராக்டர்கள் பாதுகாப்பாக தார்ப்பாயை வைத்து மூடி வர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.