இடிந்து விழும் நிலையில் கூட்டுறவு வங்கி கட்டடம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
விருதுநகர்: விருதுநகர் அருகே பெரியபுளியம்பட்டியில் செயல்படாத தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டடத்தில் மாடு, வைக்கோல் வைத்துள்ளனர். இக்கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருதுநகர் அருகே பெரியபுளியம்பட்டியில் மாந்தோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டது. இந்த வங்கி சொந்த கட்டடத்தில் இருந்தது. ஆனால் வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட பின்பு இந்த கட்டடம் முழுவதுமாக கைவிடப்பட்டது.இதை தற்போது அப்பகுதியினர் மாடுகள் கட்டுமிடமாகவும், வைக்கோல் வைக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கட்டடம் முழுவதும் சேதமாகி இருப்பதால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.மேலும் குடியிருப்புகளுக்கு அருகே உள்ளதால் இடிந்து விழும் போது மக்கள் பாதிக்கப்படும் நிலை உண்டாகியுள்ளது. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.