மேலும் செய்திகள்
இயற்கை உரமாகும் எருக்கு செடிகள்
14-Jul-2025
கோடை உழவு செய்து பக்குவப்படுத்தி வைத்த நிலத்தில் தற்போது ஆடிப்பட்ட விதைப்பு பணிகள் நடக்கிறது. நிலங்களில் செயற்கை உரமிட்டு மண்ணின் வளம் கெட்டு, ஒவ்வொரு முறையும் மகசூல் குறைவாக கிடைப்பதை விவசாயிகள் நன்கு அறிவர். செயற்கை உரமான களைக்கொல்லி உள்ளிட்ட கொடிய மருந்துகளை தெளிப்பதால், மண்வளம் பாதிக்கப்பட்டு, மலட்டுத்தன்மை அடைகிறது. அடுத்தடுத்து விவசாயம் செய்யும் போது விதைகள் வீணாகி, முளைக்காமல் போகிறது. எதற்கும் பயன்படாத நிலங்களாக மாறிவிடு கிறது. அதேபோல் நெல் நடவுக்குப் பின் உரம் இட்டால் பயிர்கள் நன்கு வளர்ந்து பால் பிடிக்கும் என்பதால் உரத்திற்காக விவசாயிகள் பல்வேறு செயற்கை உரங்களை இடுகின்றனர். பயிர்கள் சரிவர விளையாமல் பதர்களாகின்றன. அது மட்டுமல்ல மண்வளம் பாதிக்கப்படுவதோடு, மனித ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாக வேண்டி யிருக்கிறது. தற்போது ஆரோக்கிய சூழல் முற்றிலும் மாறுபட்டு இருப்பதால் இயற்கை உரத்தின் பயன்பாடு மீண்டும் அத்தியாவசியமாகிறது. இதிலிருந்து விடுபட, முன்னோர் பயன்படுத்திய இயற்கை உரத்தின் மூலம் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் மாற வேண்டும். இதற்காக கிராமப்புறங்களில் ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளின் கழிவுகள், வைக்கோல் போன்றவற்றிலிருந்து தொழு உரம் தயாரிக்கலாம். பயிர்களின் இலைகள் தளைகள் பிற கழிவுகளை பயன்படுத்தி உரமாக்கலாம். மண்புழுக்களை பயன்படுத்தி கரிம கழிவுகளை உரமாக மாற்றலாம். சில பயிர்களை நிலத்தில் விதைத்து வளர்ந்த உடன் நிலத்திலேயே மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் இயற்கை உரம் கூடுகிறது. மரக்கட்டைகளை எரிப்பதன் மூலம் கிடைக்கும் சாம்பல் சிறந்த இயற்கை உரமாக இருக்கிறது, எண்ணெய் வித்துக்களை அரைத்து கிடைக்கும் சக்கைகளை உரமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் மண்வளத்தை மேம்படுத்தி தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. மண்ணில் உள்ள நுண் உயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நிலத்தடி நீரை பாதுகாக்கிறது. உணவு பொருட்களில் நச்சுத்தன்மை இருக்காது. இயற்கை உரங்களை பயன்படுத்தி மண், மனித வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க விவசாயிகள் முன்வர வேண்டும்.
14-Jul-2025