தொடர்ந்து 2வது முறையாக தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது என்பது தமிழக அரசியல் வரலாறு சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு
சிவகாசி:''தொடர்ந்து இரண்டாவது முறையாக தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது என்பது தமிழக அரசியல் வரலாறு,'' என, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.அவர் மேலும் பேசியதாவது: அ.தி.மு.க., கூட்டணியை கண்டு தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தி.மு.க., நிர்வாகிகளே அக்கட்சிக்கு ஆப்பு வைக்க உள்ளனர்.2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்.அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் இருந்தால் அவர் அங்கு இருக்க மாட்டார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி ஆட்சி என்று எங்கே சொன்னார்கள். யார் சொன்னார்.தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி வரும். ஆன்மிகத்தின் அடையாளமான கட்சியே அ.தி.மு.க., தான். தி.மு.க., சமூக நீதிக்காகவும், தமிழ் மொழிக்காகவும் போராடுவதாக பொய் சொல்லி வேஷம் போட்டு வருகிறது.தி.மு.க., வந்த உடனே என் மீது பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ., டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன.இந்த வழக்குகளை பார்த்து பயந்து ஓடவில்லை. நான் யாரையும் ஏமாற்றியதாக வரலாறு கிடையாது. என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.