வளைவான இடத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்
காரியாபட்டி : காரியாபட்டியில் மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலை கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் கனரக வாகனங்களை நிறுத்துவதால், ரோட்டை கடக்க முற்படும்போது வாகனங்கள் வருவது தெரியாமல் அடிக்கடி விபத்து நடப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். காரியாபட்டியில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் கனரக வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்கின்றனர். அந்த இடம் சற்று வளைவாக இருக்கும். காரியாபட்டி ஊருக்குள் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மதுரை, கள்ளிக்குடி மார்க்கமாக செல்ல நான்கு வழிச் சாலையை கடக்க முற்படும்போது, வாகனங்கள் வருவது தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஏற்கனவே நடந்த விபத்துகளில் பல உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதுடன், ஏராளமானோர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரோட்டை கடக்க வாகன ஓட்டிகள் படாதபாடு படுவதோடு, அச்சத்துடன் கடக்க வேண்டி இருக்கிறது. மேலும் விபத்து ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.