விவசாய நிலத்திற்குள் பாயும் தொழிற்சாலை கழிவுநீர்
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் விவசாய நிலத்திற்குள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாயும் தொழிற்சாலை கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப் படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். சிவகாசி அருகே திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே விருதுநகர் ரோட்டில் விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இந்நிலையில் இப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையின் கழிவு நீர் விவசாய நிலத்திற்குள் விடப்படுகின்றது. மழைக்காலங்களில் மழை நீரோடு சேர்ந்து கழிவு நீர் விவசாய நிலம் முழுவதும் பாய்கிறது. இதனால் பயிர்களில் நோய் தாக்கி அழிந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்போது விவசாய நிலங்களில் மக்காச்சோளம், வாழை பயிரிடப்பட்டு உள்ளது. ஆனால் தொழிற்சாலையின் கழிவு நீர் விவசாய நிலத்திற்கு வருவதால் பயிர்களில் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவிக்கும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 10 ஆண்டுகளாக விவசாயத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது, என்றனர்.