தாலுகா அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ., பரிசோதனை நிறுவுவது அவசியம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மட்டுமே எம்.ஆர்.ஐ., பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் நோயாளிகளின் நலனுக்காக எம்.ஆர்.ஐ., பரிசோதனை இல்லாத அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் உள்ளிட்ட தாலுகா அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ., பரிசோதனை கொண்டுவர நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மட்டுமே எம்.ஆர்.ஐ., பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனை காப்பீட்டு திட்டத்தில் இலவசமாகவும், ரொக்கமாக ரூ.2500 பெற்று எடுக்கப்படுகிறது. இங்கு ஒரு நாளைக்கு 15 முதல் 25 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ரூ.30.35 கோடியில் அருப்புக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டடங்கள், புதிதாக ராஜபாளையத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.40 கோடியில் பணிகள் நடப்பதாகவும், இரு மாவட்ட தலைமை மருத்துவமனை கொண்ட ஒரே மாவட்டம் விருதுநகர் என ஜூலை 17ல் நடந்த 14 புதிய மருத்துவக் கட்டடங்கள் திறப்பு விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார். ஆனால் தற்போது வரை அருப்புக்கோட்டை, ராஜபாளையத்தில் சி.டி., ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை மட்டுமே எடுக்கப்படுகிறது. எம்.ஆர்.ஐ., பரிசோதனையை எடுப்பதற்காக மேல் சிகிச்சை என எழுதி வாங்கிக்கொண்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனைக்காக நோயாளிகள் காத்திருந்து எடுத்து செல்கின்றனர். முன்னேற விரும்பும் மாவட்டங்களின் பட்டியலில் விருதுநகர் இருப்பதால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் சி.டி.,ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனைகள் அதிகமாக தினசரி எடுக்கப்படுகிறது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்., பரிசோதனை செயல்பாட்டு கொண்டு வந்தால் நோயாளிகள் பயனடைவார்கள் என்பதால் விரைந்து கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது.