சிவகாசியில் ஜல் ஜீவன் பணிகள்
சிவகாசி : சிவகாசி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகளை முழுமையாக முடித்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசி பகுதியில் ஊராட்சிகளில் உள்ளூர் குடிநீர் ஆதாரத்தின் மூலமாகவும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. அதே சமயத்தில் அனைத்து வீடுகளுக்கும் தனித் தனியாக வீட்டு குழாய் இணைப்பதற்காக மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை துவக்கியது. திட்டத்தின் படி சிவகாசி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளிலும் 2022- - 23 ல் ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கும்பணியை துவங்கியது. அந்தந்த கிராமத்தில் திட்ட மதிப்பிற்கு ஏற்றபடி 5 முதல் 10 சதவீதம் மக்கள் பங்களிப்பு தொகையுடன் வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுத்த பின்னர் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும். பெரும்பான்மையான ஊராட்சிகளில் 70 பணிகள் மட்டுமே முடிந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. வழக்கம் போலவே அப்பகுதி கிராம மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து முறையாக ஆய்வு செய்து, சிவகாசி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு கொடுத்து முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.