| ADDED : ஜன 22, 2024 04:33 AM
ஸ்ரீவில்லிபுத்தார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு காட்டழகர் கோயிலில் வனத்துறை உத்தரவால் 5 மாதமாக பவுர்ணமி பூஜை நடக்காததால் பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். இங்கு மீண்டும் பூஜை நடத்த ஆண்டாள் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.செண்பகத்தோப்பில் பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் கோயில்களும், மலையில் காட்டழகர் கோயிலும் உள்ளது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சிரமமின்றி வந்து சென்ற நிலையில், புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு பக்தர்களை அனுமதிப்பதில் வனத்துறை கடும் கட்டுப்பாட்டுகளை விதித்தது. இதனால் தற்போது வனப்பகுதி கோயில்களுக்கு பக்தர்கள் செல்வதில் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் சில மாதங்களாக காட்டழகர் கோயிலில் இரவு 6:00 மணி முதல் 9:00 மணி வரை நடக்கும் பவுர்ணமி பூஜை வழிபாட்டிற்கும் வனத்துறை அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்களும் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. பூஜையும் நடக்கவில்லை. இது காட்டழகர் பக்தர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது.எனவே, மீண்டும் காட்டழகர் கோயிலில் பவுர்ணமி பூஜை வழிபாடு நடக்கவும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவும் ஆண்டாள் கோயில் நிர்வாகம், வனத்துறை, மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காட்டழகர் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.