அன்பு நகரில் சகதியான தெருக்கள் : பாடாய்படுத்தும் பாதாள சாக்கடை பணிகள்
அருப்புக்கோட்டை: நவ. 12--: அருப்புக்கோட்டை அன்பு நகரில் பாதாள சாக்கடை பணிகளால் ரோடுகள் சேதம் அடைந்து மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால் பள்ளி மாணவர்கள் நடக்க முடியாமல் அவதிப்படு கின்றனர். அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஓராண்டாக நடந்து வருகிறது. புறநகர் பகுதிகளில் முதற்கட்டமாக பணிகள் செய்யப்படுகின்றன. நகராட்சி 3 வது வார்டு அன்பு நகரில் இந்தத் திட்டம் நடந்து வரு கிறது. தெருக்களில் ரோடுகள் தோண்டி எடுக்கப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடப்பதால் பல மாதங்களாக மக்கள், பள்ளி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அனைத்து ரோடுகளும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்நிலையில், 2 நாட்களாக மழை பெய்து வருவதால் அனைத்து ரோடுகளும் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதில் நடந்து செல்ல பள்ளி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தெருக்களை தோண்டுவதும், மூடுவதுமாக இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. பணிகளை விரைவில் முடித்து ரோடு அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பணிகள் முடிந்த தெருக்களில் தற்காலிகமாக மண்ணை கொட்டி சீரமைக்க வேண்டும்.