புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு கூடுதல் இலவச தாய் சேய் ஊர்தி வழங்க வேண்டும்
விருதுநகர் : தமிழகத்தில் உள்ள 11 புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்து வீடு திரும்ப வாகனத்திற்காக நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க கூடுதல் இலவச தாய் சேய் ஊர்தி வழங்க வேண்டும்.புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் திறக்கப்பட்ட நாள் முதல் மகப்பேறு சிகிச்சை பிரிவில் நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு பரிசோதனை, அவசர சிகிச்சை, தாய்ப்பால் வங்கி என மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 500 பிரசவங்களுக்கும் மேல் நடக்கிறது.இங்கு பிரசவம் முடித்தவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வீடுகளுக்கு சிரமமின்றி செல்ல ஏதுவாக இலவச தாய், சேய் ஊர்தி செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த போது வழங்கப்பட்ட ஒரு இலவச தாய், சேய் ஊர்தியே மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் செயல்படுகிறது. இதுவரை கூடுதல் ஊர்திகள் வழங்கப்படவில்லை.இந்த ஊர்தி ஒரு முறை தாய், சேய் இறக்கி விட சென்று விட்டால் திரும்ப வரும் வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் வாகனத்திற்காக காத்திருக்காமல் இருக்க அருகே உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துமவனைகளில் உள்ள தாய், சேய் ஊர்தியை அழைக்கின்றனர்.ஆனால் அங்குள்ள வாகனம் வெளியே சென்று விட்டால் கைக்குழந்தையுடன் காத்திருக்க வேண்டிய நிலையே தொடர்கிறது. எனவே புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு கூடுதலாக இலவச தாய், சேய் ஊர்திகளை வழங்கி வாகனத்திற்காக காத்திருக்கும் நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.