ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஏப்.24,25ல் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் நான்கு வனச்சரகங்களுக்குட்பட்ட 28 இடங்களில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்., 24, 25ல் நடக்கிறது.தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம் 2022ல் துவக்கப்பட்டது. இதன்படி நீலகிரி வரையாடுகளில் எண்ணிக்கையை அறிவது, அதன் வாழ்விடங்களை பாதுகாப்பது உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கடந்தாண்டு முதல் முறையாக தமிழக, கேரள வனப்பகுதிகளில் இரு மாநில வனத்துறையினரும் இணைந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் தமிழகத்தில் 1031 வரையாடுகள் இருப்பதும், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்காவிலும், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்திலும் அதிகளவில் வரையாடுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்தாண்டு ஏப்.,24 முதல் 27 தேதி வரை வரையாடுகள் கணக்கெடுப்பு பணியை 176 இடங்களில் நடத்த தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.அதன்படி ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் ஆகிய வனச்சரகங்களில் 28 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்., 24 காலை 6:00 முதல் ஏப்., 25 மாலை வரை நடக்கிறது. மறுநாள் இதனுடைய தரவுகள் புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு சென்னை வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட உள்ளது.இதில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று ஸ்ரீவில்லிபுத்துார் வன விரிவாக்க மையத்தில் நடந்தது. இதில் வரையாடுகளை எப்படி கண்டறிந்து கணக்கிடுவது என்பது குறித்து நீலகிரி வரையாடுகள் திட்ட வனவர் வைரவராஜ், ஆராய்ச்சியாளர் நேசன், உயிரியலாளர் பார்த்திபன், வனச்சரகர் செல்வமணி பேசினர். சீருடைகள், கணக்கெடுப்பு பணிக்கான பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.