சேதமடைந்துள்ள திருத்தங்கல் மண்டல அலுவலகத்தால் அவதியில் மக்கள்
சிவகாசி : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் குடிநீர் ,கழிப்பறை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் சேதமடைந்துள்ள அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருத்தங்கல் நகராட்சியாக இருந்த போது செயல்பட்டு வந்த நகராட்சி அலுவலகம் சிவகாசி மாநகராட்சியோடு இணைந்த பின்னர் மண்டல அலுவலகமாக மாற்றப்பட்டது. தவிர இங்கு இ சேவை மையம், வரி வசூல் உள்ளிட்ட அலுவலகப் பணிகளும் நடந்து வருகின்றது. இதனால் இங்கு தினமும் 200 க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு தேவைகளுக்கும் வந்து செல்கின்றனர். குடிநீர், கழிப்பறை வசதி இல்லாததால் ஒவ்வொரு தேவைக்கும் வருகின்ற மக்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதால் அவதிப்படுகின்றனர்.மேலும் அலுவலகம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. கட்டடத்தில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மக்கள் நடமாடும் போது கட்டடம் இடிந்து விழுந்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கட்டடத்தை சீரமைக்கவும், கழிப்பறையை மராமத்துப் பணிகள் மேற்கொள்வதற்காகவும் ஒரு ஆண்டிற்கு முன்பு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது.ஆனால் இதுவரையில் எந்த பணியும் துவங்கவில்லை. எனவே மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.