மின் இணைப்பு துண்டிப்பு; 14,000 கோழிகள் பலி
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே பி.திருவேங்கடபுரத்தில், ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்லமுத்துபாண்டியன், மூன்றாண்டுகளாக குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணையில், 15,000 கோழிகள் வளர்த்து வந்தார். இவர், மின்கட்டணம், 26,765 ரூபாய் நிலுவை வைத்திருந்தார். அத்துடன் கடந்த மாதத்திற்கான மின்கட்டணம், 22,233 ரூபாய் தொகையை செலுத்த மே, 20 வரை அவகாசம் இருந்தது.நேற்று, கடந்த மாதத்திற்கான மின்கட்டண தொகையை செலுத்த கல்லமநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் சென்றபோது, ஏற்கனவே நிலுவையில் உள்ள தொகையையும் சேர்த்து செலுத்த, மின்வாரிய ஊழியர்கள் அறிவுறுத்தினர். கூடுதல் பணத்தை தயார் செய்து மொத்த மின்கட்டண தொகையான, 49,719 ரூபாயையும் செலுத்தியுள்ளார்.ஆனால், மின் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்ததால், கோழிப்பண்ணையில் இருந்த ஏசி செயல்படாமல், 14,000 கோழிகள், வெப்பம் தாங்காமல் ஒன்றன்பின் ஒன்றாக செத்து மடிந்தன. செல்லமுத்துபாண்டியன் மின் அதிகாரிகள் மீது, மாரனேரி போலீசில் புகார் செய்தார்.மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் கூறுகையில், ''நிலுவை கட்டணத்தை செலுத்த, ஆறு மாதங்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ''நேற்று கோழிப்பண்ணையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னரே அவர் பணம் செலுத்தினார். தொடர்ந்து, 30 நிமிடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது,'' என்றார்.