| ADDED : ஏப் 14, 2024 03:42 AM
கடந்த ஆண்டு தரவுகளின் படி தமிழகத்தில் மின்னல் தாக்கி இறந்தோர் விருதுநகர் மாவட்டத்தில் தான் அதிகம் உள்ளனர். 2022 ஜன. முதல் 2023 மே வரை 13 பேர் பலியாகி உள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். மின்னலை அலட்சியமாக நினைத்து விடாமல் தகுந்த முன்னெச்சரிக்கையோடு மக்கள் செயல்படுவது அவசியமாகிறது. பேரிடர் மேலாண்மைத்துறையும் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.மாவட்டத்தில் கோடை மழை, பருவமழை காலங்களில் மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும். மாவட்டத்தின் பரப்பளவு அதிகமாக உள்ளதால் வெட்டவெளிகளும் அதிகளவில் உள்ளன. இதனால் அதிகளவில் மின்னல் தாக்கி கால்நடைகள் பலியாவதும், மனிதர்கள் காயமடைந்து இறத்தலும் நடந்து வருகின்றன. மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்ய துவங்கி உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையின் போது பலத்த மின்னல் வெட்டியது.இது போன்ற நேரங்களில் இடி, மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள், காயங்கள் அதிகமாக ஏற்படுகின்றன.மழை பெய்யும் போது இடி, மின்னல் நேரங்களில் பொதுமக்கள், அலைபேசி, தொலைபேசியை உபயோகிக்க வேண்டாம், இடி சப்தம் கேட்கும் போது முற்றிலும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், மின்னல் ஏற்படும் போது கால்நடைகளை மரத்தடியில் கட்டுவதை தவிர்ப்பது, உயர் மின்தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்ப்பது ஆகியவற்றை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.சிறிய அளவு மின்சாரத்தை உணர்வது, உடல் உரோமங்கள் சிலிர்ப்பது அல்லது உடல் கூச்சம் ஏற்படுவது ஆகியவை மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகள். எனவே அப்போது தரையில் உடனடியாக அமர வேண்டும். இது தொடர்பாக பேரிடர் மேலாண்மைத்துறை பல்வேறு விழிப்புணர்வு காணொலிகளை வெளியிட்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது.இருப்பினும் இந்த இறப்புகளுக்கு மக்களின் 'வெறும் மழைதானே' என்ற அலட்சியமும் ஒரு காரணம். இது போன்ற அசாதாரண நேரங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என கிராமங்களிலும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.