யு.ஜி.சி., விதிகளின்படி சம்பள உயர்வு
விருதுநகர்; 'தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளத்தை யு.ஜி.சி., பரிந்துரைகளின்படி உயர்த்தி வழங்க வேண்டும்,' என, எதிர்பார்ப்பு நிலவுகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2023க்கு முன் இப்பணியிடங்களை கல்லுாரி முதல்வரும், உயர்கல்வித்துறையும் இணைந்து நிரப்புவர். 2023 முதல் கவுரவ விரிவுரையாளர் பணிவாய்ப்புக்கு விளம்பரம் கொடுத்து விண்ணப்பிக்க அழைத்தனர். பி.எச்.டி., செட், நெட் மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு ரேங்க் பட்டியல் உருவாக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர்.2019ல் யு.ஜி.சி., விதிகளின்படி ரூ.57 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 2023க்கு பின் தேர்வான அனைத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கும் ரூ.25 ஆயிரம் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.ஆனால் தமிழகத்தில் யு.ஜி.சி., பரிந்துரைகளின்படி சம்பளம் வழங்கப்படவில்லை. அதே போல் 12 மாதங்களும் சம்பளம் வழங்கப்பட வேண்டும். மே விடுமுறையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. எனவே யு.ஜி.சி., பரிந்துரைகளின்படி சம்பளத்தை உயர்த்தியும், 12 மாதங்களுக்கு வழங்கவும் கவுரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.