திருத்தங்கலில் கல் கிடங்கில் கழிவுநீர் காய்ச்சலால் பாதிப்பு
சிவகாசி: திருத்தங்கல் நெற்குத்தி பாறை பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள கல் கிடங்கில் தேங்கியுள்ள கழிவு நீரால் 30க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.திருத்தங்கல் நெற்குத்தி பாறை பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கல் கிடங்கு உள்ளது. மழை பெய்து கல் கிடங்கு நிரம்பிய நிலையில் நகரின் ஒட்டுமொத்த கழிவுகளும் இதில் தான் கலக்கின்றது. கல் கிடங்கு முழுவதுமே பாசி படர்ந்து காணப்படுவதோடு பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இங்கிருந்து கழிவு நீர் வெளியேறி குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து விடுகின்றது. இதிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தால் இப்பகுதியில் குடியிருக்கவே முடியவில்லை என மக்கள் புலம்புகின்றனர். பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர்.மேலும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடுகின்றது. ஒரு வாரத்தில் மட்டும் இப்பகுதியைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் மருத்துவமனைக்கு அலைகின்றனர். எனவே கல்கிடங்கினை முழுமையாக மூட வேண்டும் என இப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர். சுப்புலட்சுமி, குடியிருப்புவாசி, மழைக்காலம் மட்டுமல்லாது எப்போதுமே கல்கிடங்கில் கழிவுநீர் தேங்கியுள்ளது. சிறிய மழை பெய்தாலும் கழிவு நீர் வெளியேறி வீட்டுக்குள் வந்து விடுகின்றது. குடியிருப்புகளின் வாசலை ஒட்டி உள்ள இதிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தினால் குடியிருக்கவே முடியவில்லை.ஒரு வாரத்தில் மட்டும் இப்பகுதியில் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என 30 க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்காலிகமாக கொசு ஒழிப்பு பணியாவது இங்கு மேற்கொள்வதோடு உடனடியாக கல்கிடங்களை மூட வேண்டும்.