ஆதரவற்றோர், குடிமகன்கள் புகலிடமாகும் நிழற்குடைகள்
ராஜபாளையம்; ராஜபாளையம் பகுதிகளில் பயணிகள் நிழற்குடையில் ஆதரவற்றோர், குடிமகன்கள் நிரந்தரமாக தங்குமிடமாக்கி கொள்வதால் பயணிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.ராஜபாளையம் நகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம், தொண்டு நிறுவனங்கள், அரசு சார்பில் நிழற்குடைகள் அமைந்துள்ளன. பஞ்சு மார்க்கெட், மகப்பேறு மருத்துவமனை, பி.எஸ்.கே பார்க், ஜவஹர் மைதானம், சொக்கர் கோயில், டி.பி மில்ஸ் ரோடு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தென்காசி ரோடு அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் நிழற்குடைகளில் பயணிகள் உபயோகிப்பதற்கு இயலாத வகையில் குடி மகன்கள், பயணிகள் அல்லாதவர்கள் ஓய்வு எடுப்பதும், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள், மனநிலை பாதித்தவர்கள் ஒரு பகுதியை ஆக்கிரமித்து தங்குமிடமாகவும் மாற்றி வருகின்றனர்.யூனியன் அலுவலகம், மகப்பேறு மருத்துவமனை, சொக்கர் கோயில் உள்ளிட்ட இடங்களில் இந்நிலை காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் பயணிகளுக்கு இடையூறு போன்றவற்றால் குழந்தைகளை வைத்துக்கொண்டு பெண்கள் நிழற்குடையை விட்டு வெளியே நிற்க வேண்டி உள்ளது.பி.எஸ்.கே பார்க், பஞ்சு மார்க்கெட், அரசு மருத்துவமனை, ஜவஹர் மைதானம் போன்றவற்றில் உள்ள நிழற்குடைகளில் குடிமகன்களும், பயணிகள் அல்லாதோறும் அமர்ந்து கொண்டு பெண்கள், மாணவிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர். இது தவிர நிழற்குடைகளை முறையாக பராமரிப்பு செய்வதில்லை. இதனால் குடிமகன்கள் விட்டுச் சென்ற பாட்டில்களும் குப்பை பொருட்களும் குவிகின்றன.உள்ளாட்சி நிர்வாகங்கள், போலீசாரும் நிழற்குடைகளில் தங்குபவர்களை அப்புறப்படுத்தி பயணிகள் நிற்குமிடமாக மாற்றி தர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.