சிவகாசி மாநகராட்சி நகர் நல அலுவலரை தொடர்ந்து சுகாதார அலுவலர் இடமாற்றம்
சிவகாசி:சிவகாசி மாநகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் விதித்த நகர் நல அலுவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், சுகாதார அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் துாய்மை பணி மேற்கொள்ளும் மதுரையைச் சேர்ந்த ராம் அண்ட் கோ ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூ.8.5 கோடி வழங்கப்படுகிறது. ஒப்பந்த நிறுவனம் முறையாக துாய்மை பணி மேற்கொள்ளவில்லை என எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, பல்வேறு விதிமீறல்கள் தெரியவந்ததை அடுத்து, ரூ.37 லட்சம் அபராதம் விதிக்க நகர் நல அலுவலர் சரோஜா பரிந்துரை செய்தார். ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் நகர் நல அலுவலர் சரோஜா கடந்த மாதம் தென்காசி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அங்கு நகர்நல அலுவலர் பணியிடமே கிடையாது. எனவே சரோஜா காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். இந்நிலையில் அபராதம் விதிக்கும்போது நகர் நல அலுவலருடன் பணிபுரிந்த சுகாதார அலுவலர் பாண்டியராஜன் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். துாய்மைப் பணி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்த விவகாரத்தில் அடுத்தடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பந்தாடப்படுவது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.