உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறுந்தகவல் வராததன் பின்னணி
விருதுநகர்: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், மனுக்கள் பதிவு செய்ததற்கான குறுந்தகவல் வராததால், மக்கள் புலம்புகின்றனர். தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு, குறுந்தகவல் வருவது வழக்கம். பட்டா மாறுதல் போன்ற வருவாய் துறை தொடர்பான சில மனுக்கள் அளிக்கப்பட்டாலும், வாங்கி வைத்து, இணையத்தில் பதிவேற்றாமல் விட்டு விடுகின்றனர். இதனால், விண்ணப்பித்த பலர், 'குறுந்தகவல் ஏதும் வரவில்லை' என, புலம்புகின்றனர். மாநிலம் முழுதும் பல இடங்களில் இந்த பிரச்னை உள்ளது. பட்டா விவகாரங்களில் குளறுபடி உள்ள காரணங்களால், நிராகரித்தால், அது முகாமில் பெற்று நிராகரிக்கப்பட்ட மனுக்கள் கணக்கில் வந்து விடும் என்பதால், இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. அரசு ஜீரோ நிராகரிப்பு, கொடுத்த அனைத்து மனுவுக்கும் தீர்வு என அறிவிக்க காத்திருப்பதால், இந்த நிலை ஏற்படுவதாக வருவாய்த்துறையினர் புலம்புகின்றனர். மேலும், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதில், ஆளும் கட்சியினரின் தலையீடும் அதிகம் உள்ளதால் அதிகாரிகள் திக்குமுக்காடுகின்றனர்.