திருத்தங்கல் பாண்டியன் நகர்- சத்யா நகர் ரோடு சேதம்
சிவகாசி: திருத்தங்கல் பாண்டியன் நகரில் இருந்து சத்யா நகர் வழியாக சிவகாசி செல்லும் ரோடு சேதமடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுவதால் ரோட்டை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.திருத்தங்கல் பாண்டியன் நகரில் இருந்து சத்யா நகர் செல்லும் ரோடு சிவகாசி மெயின் ரோட்டில் இணைகிறது. செங்கமல நாச்சியார்புரம், பாண்டியன் நகர் சத்யா நகர் பகுதி மக்கள் இதன் வழியாக சிவகாசி வருகின்றனர். சத்யா நகர் ரோடு சேதம் அடைந்திருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியினர் சிவகாசிக்கு எளிதில் சென்று வந்தனர். இந்நிலையில் புதிதாக போடப்பட்ட ரோடு ஆங்காங்கே சேதமடைந்து விட்டது. மிகப்பெரிய பள்ளமாக மாறியதால் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது.இருளில் டூவீலரில் வருபவர்கள் தடுமாறி விழுகின்றனர். அப்பகுதி குழந்தைகள் பெரியவர்கள் ரோட்டில் உள்ள பள்ளத்தால் கீழே விழுகின்றனர். பள்ளி மாணவர்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். தவிர மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே சேதம் அடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.