| ADDED : ஜன 02, 2024 04:50 AM
சிவகாசி,: சிவகாசி மாநகராட்சியில் துாய்மை இந்தியா திட்டம் 2.0 ன் கீழ் கட்டப்பட்ட சிறுநீர் கழிப்பிடங்களில் பெரும்பான்மையானவை பயன்பாட்டில் இல்லாததால் நிதி வீணடிக்கப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.சிவகாசி மாநகராட்சியில் மத்திய அரசின் திட்டமான துாய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தலா ஆறு இருக்கை கொண்ட சிறுநீர் கழிப்பிடம் , ராணி அண்ணா காலனி காமராஜர் பூங்கா, பி.கே.எஸ்.ஏ., ஆறுமுகம் ரோடு தெய்வானை நகர், பி.கே.என். ரோடு, திருத்தங்கல் உள்ளிட்ட 10 இடங்களில் தலா ரூ. 1.92 லட்சம் மதிப்பீட்டில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் படி மத்திய அரசின் பங்களிப்பு 50 சதவீதம், மாநில அரசின் பங்களிப்பு 33 சதவீதம், மாநகராட்சி பொது நிதி பங்களிப்பு 17 சதவீதம் என நிதி உதவியுடன் கட்டப்பட்டது.இவைகள் சில வாரங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பெரும்பான்மையானவை பயன்பாட்டில் இல்லை. ராணி அண்ணா காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் வசதி இல்லாததால் பூட்டப்பட்டுள்ளது.இதனால் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. இந்த சிறுநீர் கழிப்பிடங்கள் சேதமடைந்து வீணாவதற்குள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.