விருதுநகர் அரசு மருத்துவமனையில் 10 மெட்டல் டிடெக்டர்களால் சோதனை
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள், நோயாளிகளின் பாதுகாப்புக்காக வெளியில் இருந்து வருபவர்களை மெட்டல் டிடெக்டர்கள் மூலம்சோதனை செய்து அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு தினமும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை, சிகிச்சைக்கு அதிக செலவாவதால் பலரும் அரசு மகப்பேறு, மருத்துவமனையை நாடுகின்றனர்.இங்கு சிறைகைதிகளுக்கு தனி வார்டு இல்லை. இதனால் பிற நோயாளிகளுடன் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் சிறை கைதிகள் மதுரை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு மாற்றப்படுகின்றனர். இங்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கின்றனர்.தமிழகத்தில் மருத்துவமனைகளில் வைத்து டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், சிகிச்சை பெறுபவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் தொடர்கிறது. இதில் கத்தியை மறைத்து கொண்டு வந்து நடக்கும் தாக்குதல்களால் பணியாளர்கள், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இது போன்ற சம்பவங்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை நிர்வாகம் 10 மெட்டல் டிடெக்டர்களை வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு திட்டமிட்டுள்ளது.உள்நோயாளிகளை பார்ப்பதற்காக வரும் வெளிநபர்கள், அவர்கள் கொண்டுவரும் பொருட்களை மெட்டல் டிடெக்டர்களால் பாதுகாப்பு ஊழியர்கள் முழுசோதனை செய்த பின் அனுமதிப்பார்கள். இதனால் தாக்குதல் சம்பவங்கள் நடப்பதை முன் கூட்டியே தடுக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.