ஊரக பகுதிகளில் வீணாகும் மினரல் குடிநீர் பிளான்ட்கள் தோல்வி திட்டங்களால் பாழாகும் மக்கள் வரிப்பணம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஊரக பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மினரல் குடிநீர் பிளான்ட்கள் பயன்பாடின்றி கிடப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது.விருதுநகர் வறட்சி மாவட்டம் என்பதால் குடிநீர் பிரச்னை எப்போதும் இருக்கும். இதை தீர்க்க உப்புச்சுவை உடன் கூடிய ஆழ்துளை கிணறு நீரை எதிர்சவ்வூடு பரவல் எனப்படும் 'ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் சிஸ்டம்' (ஆர்.ஓ.,) முறையில் நன்னீராக்க மினரல் குடிநீர் பிளான்ட்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டன. இவை நாளடைவில் செயல்படாமல் போயின. இந்நிலையில் 2021ல் மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் கனிமவள சீனியரேஞ்ச் நிதி, மாநில நிதிக்குழும நிதி ஆகியவை மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் இந்த மினரல் குடிநீர் பிளான்ட்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் பல பயன்பாடின்றியும், சில திறப்பு விழா காணாமல் காட்சி பொருளாக மாறியும் வருகின்றன.குறிப்பாக ஆமத்துார், பாவாலி, மம்சாஈபுரம் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படாத மினரல் குடிநீர் பிளான்ட்கள் உள்ளன. மாநகராட்சி, நகராட்சிகளில் அதிகளவில் அலுவலர்கள், ஊழியர்கள் இருந்துமே இந்த மினரல் குடிநீர் தோல்வி அடைந்த திட்டமாக தான் உள்ளது. இத்திட்டத்தை ஊரக பகுதிகளிலும் செயல்படுத்தி தற்போது மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி உள்ளது மாவட்ட நிர்வாகம். இவற்றை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.