செவல்பட்டியில் ஒரு ஆண்டாக குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் ஓராண்டாக கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சங்கரன்கோவிலில் இருந்து அம்மையார்பட்டி, செவல்பட்டி வழியாக தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. செவல்பட்டி நான்கு விலக்கு ரோடு அருகே சங்கரன்கோவில் ரோட்டில் ஒரு ஆண்டாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள பள்ளி செல்லும் வழியில் ரோடு முழுவதும் தண்ணீர் ஓடுவதால் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதே பகுதியில் உள்ள அம்மையார்பட்டி சக்கம்மாள் புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 30 ஆண்டுகளாக குடிநீர் இல்லாத நிலையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே உடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.