உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பிளவக்கல் பெரியாறு அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

 பிளவக்கல் பெரியாறு அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

வத்திராயிருப்பு: பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து, தமிழக வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை இரண்டாம் முறையாக நிரம்பியதையடுத்து அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி நேற்று காலை 11:50 மணிக்கு பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மலர் தூவி திறந்து வைத்தார். பின் அவர் கூறியதாவது: இன்று முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன அடி வீதமும், நேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் 2026 பிப்ரவரி 28 வரையிலும் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் 40 கண்மாய்களில் 7 ஆயிரத்து 219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதான கால்வாய் நேரடி பாசனத்தில் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடையும். இதனை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை கடைப்பிடித்து அதிக மகசூல் பெற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தென்காசி எம்.பி.ராணி, சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், கலெக்டர் சுகபுத்ரா, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மதன சுதாகரன், செயற்பொறியாளர் மகேஸ்வரி பங்கேற்றனர். * ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போக சாகுபடிக்காக நீர் தேக்கம் திறக்கப்பட்டது சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் திறந்து விட்டனர். வினாடிக்கு 50 கன அடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தொடர் நீர் வரத்தைப் பொறுத்து 48 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !