விருதுநகர் மாவட்ட கள ஆய்வுக்கு வந்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்திற்கு கள ஆய்வு, புதிய கலெக்டர் அலுவலக கட்டடம் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நேற்று காலை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களுக்கு சென்று அடைகிறதா, பட்டாசு தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் பற்றி கள ஆய்வு செய்திடவும், ரூ. 77 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை திறந்தும், அரசு துறைகள் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள 35 புதிய கட்டடங்களை திறக்கவும், 57 ஆயிரத்து 556 பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்று காலை வந்தார். இவருக்கு அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் சத்திரரெட்டியப்பட்டி விலக்கில் இருந்து வரவேற்பளிக்கப்பட்டது.மேலும் ஒவ்வொரு சட்டசபை தொகுதி சார்பிலும் தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டு கரகாட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம், தப்பாட்டம் உட்பட கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.