கை, கால் செயலிழந்த கணவர் கொன்ற மனைவிக்கு ஆயுள்
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துாரில் கை, கால் செயலிழந்த கணவர் சந்தனமாரியப்பனை கொலை செய்த மனைவி பாண்டிச்செல்விக்கு, ஆயுள் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ராஜபாளையம் அருகே சேத்துாரைச் சேர்ந்தவர் சந்தனமாரியப்பன், 45; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாண்டிச்செல்வி, 39. இவர்களுக்கு, 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் குடிப்பழக்கம் காரணமாக சந்தனமாரியப்பனுக்கு வலது கை மற்றும் கால் செயலிழந்து வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.கடந்த 2022 அக்., 16ல் தன் வீட்டில் வெட்டுக்காயங்களுடன் சந்தன மாரியப்பன் இறந்து கிடந்தார். மனைவி பாண்டிச்செல்வியே குடும்பத்தகராறில் சந்தனமாரியப்பனை கொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில், பாண்டிச்செல்விக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.