உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்டேட் அலுவலகத்தை இடித்த யானைகள் : எட்டு மணி நேரம் போராடி விரட்டியடிப்பு

எஸ்டேட் அலுவலகத்தை இடித்த யானைகள் : எட்டு மணி நேரம் போராடி விரட்டியடிப்பு

வால்பாறை : கோவை வால்பாறை அருகே, எஸ்டேட் அலுவலகத்தை காட்டுயானைகள் இடித்து தரைமட்டமாக்கின; எட்டு மணி நேர போராட்டத்துக்குப் பின், யானைகளை தொழிலாளர்கள் விரட்டியடித்தனர். மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட நல்லமுடி, தாய்முடி, சோலையார், சிறுகுன்றா பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக ஒரு குட்டியுடன் ஏழு காட்டுயானைகள் உலா வருகின்றன. இவை குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்க, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11.00 மணிக்கு யானைகள் கூட்டம் மெல்ல, மெல்ல நகர்ந்து நடுமலை எஸ்டேட் பகுதிக்குள் புகுந்தது. பின், இங்குள்ள 'எஸ்டேட் மஸ்டரை' (தொழிலாளர் கணக்கெடுப்பு அலுவலகம்) இடித்தன. உள்ளே இருந்த பைல், கதவு, ஜன்னல், சேர், மேஜை உள்ளிட்ட பொருட்களை வெளியே இழுத்துப்போட்டு, சேதப்படுத்தின.

இதையறிந்த தொழிலாளர்கள், நள்ளிரவில் திரண்டு வந்தனர். பின் லாரியில் சென்று, காட்டுயானையை விரட்டும்போது, குட்டியுடன் இருந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல், தொழிலாளர்களை விரட்டத் துவங்கியது. எட்டு மணி நேர போராட்டத்துக்குப் பின், நேற்று காலை 7.00 மணிக்கு, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் காட்டுயானைகள் கூட்டம் சென்று மறைந்து கொண்டது.

வனச்சரக அலுவலர் லட்சுமணசாமி தலைமையில், வனத்துறையினர் மற்றும் எஸ்டேட் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, சேதங்களை பார்வையிட்டனர். யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்க, தேவையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ