வேண்டுமென்றே பொய் வழக்கு:நீதிபதி முன் பொன்முடி கண்ணீர்
திருவாரூர்:''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு போட்டுள்ளனர். நான் மேடையில் தவறாக எதுவும் பேசவில்லை'' என்று, திருவாரூரில் நீதிபதி முன் பொன்முடி கூறினார்.திருவாரூரில், கடந்த ஜூன் 5ம் தேதி நடந்த தி.மு.க., நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக, திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முன்னதாக, விழுப்புரத்தில் நில அபகரிப்பு வழக்கில், பொன்முடி கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், போலீசார் நேற்று முன்தினம் திருவாரூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, பொன்முடியை கைது செய்வதற்கான உத்தரவை, மாஜிஸ்திரேட் சந்திரசேகரனிடம் இருந்து பெற்றனர். கைது உத்தரவை, கடலூர் மத்திய சிறையில் இருந்த பொன்முடியிடம் அளித்து, அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருவாரூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், நேற்று மதியம் 2.15 மணிக்கு ஆஜர்படுத்தினர். ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு போட்டுள்ளனர். நான் மேடையில் தவறாக எதுவும் பேசவில்லை. வழக்கில், நான் ஆயுதம் வைத்துக்கொண்டு முதல்வரை மிரட்டியது போன்று, 506(11) பிரிவில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கு முற்றிலும் பொய்யானது. நீங்கள் (நீதிபதி) நினைத்தால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியும்' என, கண் கலங்கியவாறு நீதிபதியிடம் பொன்முடி தெரிவித்தார்.
இதையடுத்து, மாஜிஸ்திரேட் சந்திரசேகரன், வரும் 29ம் தேதி வரை பொன்முடியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கோர்ட் சம்பிரதாயங்கள் முடிக்கப்பட்டு, மீண்டும் 2.50 மணிக்கு பொன்முடியை கடலூர் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.