| ADDED : செப் 20, 2011 10:55 PM
ஆண்டிபட்டி: தேசிய குத்துச்சண்டை போட்டிக்குத் தேர்வான மாணவிகள், வயதுச் சான்று பெறுவதற்காக, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலைக்கழிக்கப்பட்டனர். தேனி மாவட்டம், போடி இசட்.கே.எம்., மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி சொக்கர்மீனா, பிளஸ் 2 மாணவி பாண்டீஸ்வரி. இருவரும், தேசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளனர். செப்., 24ல் பஞ்சாப், பாட்டியாலாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்கான தகவல், நேற்று முன்தினம் இரவு இவர்களுக்குக் கிடைத்தது. அலைகழிப்பு: 15 முதல் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட பல், ரேடியாலஜி, பொதுப்பிரிவு டாக்டர்கள் ஆகியோரிடம், தனித்தனியாக வயதுச் சான்று பெறவேண்டும். இச்சான்றிதழ் பெற, மாணவிகள் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றனர். இச்சான்றுகள் தருவதில், டாக்டர்கள் காலம் தாழ்த்தினர். இவர்களது சிரமம் குறித்து, மாவட்ட வருவாய் அலுலவர் பிருந்தா கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசிய பின், வயதுச் சான்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.