காங்., போட்டி வேட்பாளர்:சமாதான முயற்சி தோல்வி
சிவகாசி:சிவகாசியில், நகராட்சித் தலைவருக்குப் போட்டியிடும், காங்கிரஸ் போட்டி வேட்பாளரை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், மேலிடப் பார்வையாளர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்.சிவகாசி நகராட்சித் தலைவர் பதவிக்கு, காங்கிரஸ் சார்பில் அசோகன் மனு தாக்கல் செய்துள்ளார் . சீட் கிடைக்காத அதிருப்தியில், காங்கிரஸ் போட்டி வேட்பாளராக, நகராட்சி முன்னாள் தலைவர் ஞானசேகரன் மனு தாக்கல் செய்தார். இதனால், உள்ளூர் காங்கிரசார், அதிருப்தி அடைந்தனர்.இப்பிரச்னை, கட்சியின் மாநிலத் தலைமை கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, காங்., மேலிடப் பார்வையாளர் பெங்களூரைச் சேர்ந்த பிரகாஷ், ஞானசேகரனிடம் பேசினார்.எனினும், பிரச்னை முடியாததால், சிவகாசிக்கு நேரில் வந்தார். மாலையில், பேச்சு வார்த்தைக்கு வருவதாக ஞானசேகரன் கூறியதால், நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை , மேலிடப் பார்வையாளர் மற்றும் தேர்தல் பணிக் குழுவினர் காத்திருந்தனர்.ஆனால், ஞானசேகரன் வரவில்லை; மொபைல்போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால், மேலிடப் பார்வையாளர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்.